"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label இடைக்காட்டுச் சித்தர் பாடல். Show all posts
Showing posts with label இடைக்காட்டுச் சித்தர் பாடல். Show all posts

Monday, June 29, 2015

இடைக்காட்டுச் சித்தர் பாடல்

இடைக்காட்டுச் சித்தர் சங்கப் புலவரான இடைக்காடரினும் வேறானவர். 
இவரது காலம் கி.பி. 15ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. இவர் 
கொங்கணச் சித்தரின் சீடராவார். இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே 
உள்ள இடைக்காடா அல்லது தொண்டை மண்டலத்தில் உள்ள 
இடையன்மேடா என்பது ஆய்விற்குரியது.


ஒருசமயம் இவர் பொதிய மலைச்சாரலில் வழக்கம் போல் ஆடு 
மேய்த்துக் கொண்டிருக்கும் போது நவசித்தரில் ஒருவர் வந்து இவரிடம் பால் 
கேட்க, அவருக்குப் பால் முதலியன கொடுத்து உபசரிக்கவே அவரும் இவரது 
அன்பைக் கண்டு மகிழ்ந்து இவருக்கு ஞானத்தை உபதேசித்து விட்டுச் 
சென்றாராம். அதனால் ஏழை ஆடு மேய்க்கும் இடையன் மாபெரும் 
சித்தரானார்.


தமது சோதிட அறிவால் இன்னும் சிறிது காலத்தில் ஒரு கொடிய பஞ்சம் 
வரப்போகிறது என்பதை உணர்ந்தார். முன்னெச்சரிக்கையாகத் தமது 
ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய எருக்கிலை போன்றவற்றைத் 
தின்னக் கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்னும் தானியத்தை மண்ணோடு 
சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டிக் கொண்டார். 
எருக்கிலை தின்பதால் உடலில் அரிப்பெடுத்து ஆடுகள் சுவரில் உராயும் 
போது உதிரும் வரகு தானியங்களை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு
வரப்போகும் பஞ்சத்துக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்.

வற்கடம் வந்தது. பஞ்சத்தால் உணவும் நீருமின்றி உயிர்கள் மாண்டன.
நாடே ஜன சந்தடியில்லாமல் வெறிச்சோடிக் காட்சியளித்தது. ஆனால்,
இடைக்காடர் மட்டும் என்றும் போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்திருந்தார்.

நாட்டில் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்து போக இடைக்காடரும்
அவரது ஆடுகளும் மட்டும் பிழைத்திருப்பதைக் கண்ட நவக்கிரகங்கள்
ஆச்சரியமுடன் அந்த இரகசியத்தை அறிந்துகொள்ள இவரிடம் வந்தன.

இடைக்காடருக்கோ ஆனந்தம். நவநாயகர்களும் என்குடிசையை நாடி
வந்துள்ளீர்களே! உங்களை உபசரிக்க எம்மிடம் ஒன்றுமில்லை. ஆயினும்
இந்த ஏழையின் குடிசையில் கிடைக்கும் வரகு ரொட்டியையும், ஆட்டுப்
பாலையும் சாப்பிட்டுச் சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்று
உபசரித்தார்.

பஞ்ச காலத்திலும் பசிக்கு உணவு தரும் இடைக்காடரைக் கண்டு
மகிழ்ந்த நவ கோள்களும் அந்த விருந்தினைப் புசித்தனர். எருக்கிலைச்
சத்து ஆட்டுப்பால் அவர்களுக்கு மயக்கத்தை வரவழைக்கவே அவர்கள்
மயக்கத்தால் உறங்கி விட்டனர்.

இந்த சமயத்தில் நவகோள்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உலகத்தைப்
பஞ்சத்தால் வருத்தும் கிரகங்களை இடைக்காடர் அவைகள் எந்த அமைப்பில்
இருந்தால் மழை பொழியுமோ அதற்குத் தக்கவாறு மாற்றிப் படுக்க வைத்து
விட்டார்.


வானம் இருண்டது, மேகம் திரண்டது, மழை பொழிந்தது. வறட்சி
நீங்கியது. கண் விழித்துப் பார்த்த நவகோள்களும் திடுக்கிட்டனர். நொடிப்
பொழுதில் இடைக்காடர் செய்த அற்புதம் அவர்களுக்கு விளங்கிவிட்டது.
நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை மெச்சி அவருக்கு
வேண்டிய வரங்களைக் கொடுத்து விடைபெற்றனர்.

இந்த இடைக்காடரின் புகழ் பூவுலகம் மட்டுமன்றி வானுலகமும் எட்டியது.
ஒரு சமயம் விஷ்ணுவை வழிபடுகிறவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் வணங்கத்தக்கவை எவை என்று
எழவே சித்தரிடம் கேட்டனர்.

இடைக்காடரோ ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’ என்று கூறிவிட்டுச்
சென்று விட்டார். தங்களுக்குப் பதில் சொல்லச் சங்கடப்பட்டு தன்னைத்
தாழ்த்திக் கொண்டு சென்றுவிட்டாரோ என்று அவரது தன்னடகத்தை
எண்ணிய அவர்கள் பின்னர் அவர் கூறியதை மறுபடியும் எண்ணிய போது
அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையும் புலப்பட்டது.

ஏழை - சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த
இராமன் அவதாரம்.

இடையன் - கிருஷ்ணாவதாரம்
இளிச்சவாயன் - நரசிம்மர்

தேவர்கள் இடைக்காடரின் தன்னடக்கத்தையும் நுண்ணறிவையும்
புகழ்ந்தவாறு தம்முலகு சென்றனர்.



இவைகள் இடைக்காடரைப் பற்றி வழங்கும் கதைகள். இவரது சித்தர்
பாடல் தொகுப்பில் 30 கண்ணிகள் காணப்படுகின்றன. தாண்டவக் கோனார்
கூற்றாக இவர் பாடும் கோனார் பாட்டுக்கள் ஆழ்ந்த தத்துவத்தைப்
புலப்படுத்துகின்றன.

முதலில் தாண்டவராயக் கோனார் கூற்றாக,

எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லாப் பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே

என்று கூறும் இடைக்காடர் அடுத்த நாராயணக் கோனார் கூற்றாக,

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன்

என்று தன் மனநிலையைக் கூறுகின்றார்.

தாந்தி மித்திமி தந்தக் கோனரே!
தீந்தி மித்திமி திந்தக் கோனாரே!
ஆனந்தக் கோணாரே! - அருள்
ஆனந்தக் கோணாரே

என்று இவர் ஆடும் ஆனந்தக்கூத்தும் மனக்கண்ணில் நிழலாடுகின்றது.

ஆதி பகவனையே அன்பாய் நினைப்பாயேல் சோதி பரகதிதான்
சொந்தமது ஆகாதோ? என்று நம்மைக் கேட்கும் கேள்வியில் வள்ளுவரின்
‘ஆதிபகவன் முதற்றே உலகு’ குறளின் நிழலாட்டம் தெரிகின்றது.


எல்லாம் இருந்தாலும் ஈசர்
அருள் இல்லையேல் எதுவுமே
இல்லாத் தன்மை யாகும்

என்பதில் இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையும் உணர்த்துகின்றார்.

நெஞ்சோடு கிளத்தலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை
நீக்கும்படி அறிவுறுத்துகின்றார்.

பூமியெல்லாம் ஒரு குடைக்கீழ்ப்
பொருந்த அரசாளு தற்கு காமியம் வைத்தால்
உனக்கதி யுள்ளதோ கல்மனமே

பெண்ணாசை யைக் கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே

பொன்னிச்சைக் கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மண்ணிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே

என்று மூவாசைகளையும் துறக்கச் சொல்கின்றார்.

அறிவோடு கிளத்தலில்

கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறி வாய் நீ புல்லறியே

என்று உண்மை இறையை உணர்ந்து கொள்ளச் சொல்கின்றார்.

சித்தத்தோடு கிளத்தலில் மாணிக்கவாசகரைப் போலவே தும்புவை விளித்துப்
பாடுகின்றார்.

மூவாசை விட்டோம் என்றே தும்பீபற
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற
எப்பொருளும் கனவென்றே தும்பீபற


தும்பியைப் பறக்க விட்ட இடைக்காடர் அடுத்த பாடலில் குயிலைப்
பேசச் சொல்கின்றார்.

உலகம் ஒக்காளமாம் என்று ஓதுகுயிலே
எங்கள் உத்தனைக் காண்பரிதென்று
ஓது குயிலே

என்று கூறுகின்றார்.

ஆடுமயிலே நடமாடு மயிலே! எங்கள்
ஆதியணி சேடனைக் கண்டு ஆடு மயிலே

என்று மயிலை ஆடச் சொல்கின்றார். மயில் ஆடிற்றா?

அன்னத்தைக் காண்கின்றார்.

காற்றில் மரமுறியும் காட்சியைப் போல்
நல்லறிவு தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்
போகும் மடஅன்னமே

என்று கூறுகின்றார்.

குயில், மயில், அன்னத்தை கூவியழைத்து அவை திரும்பிப்
பார்க்கவில்லைபோலும். தமது புல்லாங்குழலை எடுத்து வாசிக்கின்றார்.

தொல்லைப் பிறவி தொலைக்கார்க்கும்
முத்திதான் இல்லை என்று ஊதுகுழலே
பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம்
அடங்க ஒட்டியே ஊதுகுழலே

குழலோசைக்கு மயங்கி நின்ற ஆடுகளைப் பால் கறக்கிறார் இந்த
இடைக்காடர்.

சாவாது இருந்திடப் பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற

இங்கு இவர் குறிப்பிடுவது குண்டலினி யோகத்தை. இறைவனை அடைய
முக்தியை அடைய யோக மார்க்கமே சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றார்.

பாடல்களைப் பக்குவமாகப் படித்தால் பல கருத்துக்கள் புலனாகும்.


காப்பு

கலிவிருத்தம்

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோ துறும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவாம்.



தாண்டவராயக்கோன் கூறுதல்

கண்ணிகள்

எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும்
எல்லாப் பொருள்களு மெண்ணரிய
வல்லாள னாதி பரம சிவனது
சொல்லா லாகுமே கோனாரே. 1

வானியல் போல வயங்கும் பிரமமே
சூனிய மென்றறிந் தேத்தாக்கால்
ஊனிய லாவிக் கொருகதி யில்லையென்
றோர்ந்துகொள் ளுவீர்நீர் கோனாரே. 2

முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக் குறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ்
சேரா வாகுமே கோனாரே. 3

தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே
சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு
இல்லையென் றெண்ணுவீர் கோனாரே. 4

ஆரண மூலத்தை அன்புடனே பர
மானந்தக் கோலத்தைப் பன்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திடு கோனாரே. 5

காலா காலங் கடந்திடு சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே. 6

சொல்லருஞ் சகல நிட்கள மானதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற்
அந்தகன் கிட்டுமோ கோனாரே. 7

சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
நற்கதி சேர்ந்திடும் கோனாரே. 8

மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத
முப்பாழ் கிடந்ததா மப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ்
சிந்தையில் வைப்பீரே கோனாரே. 9

பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்ற நின்றதைப் பற்றி யன்பாய்
நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே. 10



நாராயணக்கோன் கூறுதல்

கொச்சகக் கலிப்பா

சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்

பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே. 11

கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே. 12

கண்ணிகள்

மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே. 13

சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே. 14

ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாங் கண்டறிவாய் தாண்ட வக்கோனே. 15

ஓசையுள்ள டங்குமுன்னந் தாண்ட வக்கோனே - மூல
ஓங்காரங் கண்டறிநீ தாண்ட வக்கோனே. 16

மூலப் பகுதியறத் தாண்ட வக்கோனே - உள்ளே
முளைத்தவேர் பிடுங்கேடா தாண்ட வக்கோனே. 17

சாலக் கடத்தியல்பு தாண்ட வக்கோனே - மலச்
சாலென்றே தேர்ந்தறிநீ தாண்ட வக்கோனே. 18

பற்றே பிறப்புண்டாக்குந் தாண்ட வக்கோனே - அதைப்
பற்றா தறுத்துவிடு தாண்ட வக்கோனே. 19

சற்றே பிரமத்திச்திசை தாண்ட வக்கோனே - உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டுந் தாண்ட வக்கோனே. 20

அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே - குரு
அற்றவர் கதியடையார் தாண்ட வக்கோனே. 21

செவிதனிற்கே ளாதமறை தாண்ட வக்கோனே - குரு
செப்பில் வெளி யாமல்லவோ தாண்ட வக்கோனே. 22



கட்டளைக் கலித்துறை

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே. 23

நேரிசை வெண்பா

போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்,
மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - நரகம்போம்,
வேதமுத லாகமங்கண் மேலான தென்றுபல்கால்,
ஓதுபிர மத்துற்றக் கால். 24

தாண்டவராயக்கோன் கூற்று

தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே.

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்தவட் டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறுஞ் சந்தேகந் தீர்த்தேன். (தாந்) 25

அந்தக் கரணமெனச் சொன்னா லாட்டையும்
அஞ்ஞான மென்னு மடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
சாவா திருந்திடக் கோட்டையுங் கட்டினேன். (தாந்) 26

மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை
வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே. (தாந்) 27

பற்றிரண் டும்மறப் பண்புற்றேன் நன்புற்றேன்
பாலையு முட்கொண்டேன் மேலையாங் கட்கொண்டேன்

சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன் 
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன். (தாந்) 28

அண்ணாக்கை யூடே யடைத்தே யமுதுண்ணேன்
அந்தரத் தரத்தை யப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூ சைபண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றன்றி வேறேயொன்றை நண்ணேன்.
(தாந்) 29

மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே. (தாந்) 30

வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே. (தாந்) 31

ஆறா தாரத்தெய் வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்டவா னந்தத்திற் கூடு
கோசமைந் துங்கண்டு குன்றேறி யாடு. (தாந்) 32

நாராயணக்கோன் கூறுதல்

ஆதி பகவனையே பசுவே
அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே
சொந்தம தாகாதோ. 33

எங்கும் நிறைப்பொருளைப் பசுவே
எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில் பசுவே
சந்ததஞ் சாருவையே. 34

அல்லும் பகலும் நிதம் பசுவே
ஆதி பதந்தேடில்

புல்லு மோட்சநிலை பசுவே
பூரணங் காண்பாயே. 35

ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே
உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே பசுவே
நேர்மை யறிவாயே. 36

எல்லா மிருந்தாலும் பசுவே
ஈசர் அருளிலையேல்
இல்லாத் தன்மையென்றே பசுவே
எண்ணிப் பணிவாயே. 37

தேவனு தவியின்றிப் பசுவே
தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கு மாவியதாம் பசுவே
அத்தன் திருவடியே. 38

தாயினும் அன்பனன்றோ பசுவே
சத்திக்குள் ளானவன்தான்
நேயம் உடையவர்பால் பசுவே
நீங்கா திருப்பானே. 39

முத்திக்கு வித்தானோன் பசுவே
மூலப் பொருளானோன்
சத்திக் குறவானோன் பசுவே
தன்னைத் துதிப்பாயே. 40

ஐயன் திருப்பாதம் பசுவே
அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே
விட்டொடுங் கண்டாயே. 41

சந்திர சேகரன்றாள் பசுவே
தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான்முதலோர் பசுவே
ஏவல் புரிவாரே. 42


கட்புலன் காணவொண்ணாப் பசுவே
கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப் பசுவே
உன்னத மெய்வாயே. 43

சுட்டியுங் காணவொண்ணாப் பசுவே
சூனிய மானவஸ்தை
ஒட்டிப் பிடிப்பாயேல் பசுவே
உன்னை நிகர்ப்பவர்யார். 44

தன்மனந் தன்னாலே பசுவே
தாணுவைச் சாராதார்
வன்மர மொப்பாகப் பசுவே
வையத் துறைவாரே. 45

சொல்லென்னு நற்பொருளாம் பசுவே
சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை பசுவே
எப்பொருளுஞ் சொல்லுமே. 46



பலரொடு கிளத்தல்

குறள் வெண்செந்துறை

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே. 47

மனம் வாக்கு காயமெனும் வாய்த்தபொறிக் கெட்டாத
தினகரனை நெஞ்சமதிற் சேவித்துப் போற்றீரே. 48

காலமூன் றுடங்கடந்த கதிரொளியை யுள்ளத்தாற்
சாலமின் றிப்பற்றிச் சலிப்பறவே போற்றீரே. 49

பாலிற் சுவைபோலும் பழத்தின் மதுப்போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே. 50

மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே. 51


தூய மறைப்பொருளைச் சுகவா ரிதியமிர்தை
நேய முடனாளு நிலைபெறவே போற்றீரே. 52

சராசரத் தைத்தந்த தனிவான மூலமென்னும்
பராபரத் தைப்பற்றிப் பவமறவே போற்றீரே. 53

மண் ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே. 54

பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய வொண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே. 55

எள்ளிற்றை லம்போல எங்கும் நிறைபொருளை
உள்ளிற் றுதித்தே யுணர்வடைந்து போற்றீரே. 56

நெஞ்சொடு கிளத்தல்

பூமியெல்லா மோர்குடைக்கீழ் பொருந்தவர சாளுதற்குக்
காமியம்வைத் தாலுனக்குக் கதியுளதோ கன்மனமே. 57

பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே. 58

மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
தேயுமென்றே நல்வழியிற் செல்லுநீ கன்மனமே. 59

பொன்னிச்சை கொண்டு பூமிமுற் றுந்திரிந்தால்
மன்னிச்சை நோக்கும் வாய்க்குமோ கன்மனமே. 60

பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்,
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே. 61

பேய்க்குரங்கு போலப் பேருலகி லிச்சைவைத்து,
நாய்நரிகள் போலலைந்தேன் நன்மையுண்டோ கன்மனமே. 62

இரும்பையிழுக் குங்காந்தத் தியற்கைபோற் பலபொருளை,
விரும்பினதால் அவைநிலையோ விளம்புவாய் கன்மனமே. 63

கற்பநிலை யால்லவோ கற்பகா லங்கடத்தல்
சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண கன்மனமே. 64


தேக மிழப்பதற்குச் செபஞ்செய்தென் தவஞ்செய்தென்,
யோகமட்டுஞ் செய்தாலென் யோசிப்பாய் கன்மனமே. 65

சாகா திருப்பதற்குத் தான்கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன்மனமே. 66

அறிவொடு கிளத்தல்

எல்லாப் பொருள்களையு மெண்ணப் படிபடைத்த
வல்லாளன் றன்னை வகுத்தறிநீ புல்லறிவே. 67

கட்புலனுக் கெவ்வளவுங் காணா திருந்தெங்கும்
உட்புலனாய் நின்றவொன்றை உய்த்தறிநீ புல்லறிவே. 68

விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்க முண்டாகும்,
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்ததறிநீ புல்லறிவே. 69

மெய்யிலொரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யிலொரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. 70

ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துப் புரிகின்ற கோளறிவாய் புல்லறிவே. 71

இருட்டறைக்கும் நல்விளக்காய் இருக்குமுன்றன் வல்லமையை,
அருட்டுறையில் நிறுத்திவிளக் காகுநீ புல்லறிவே. 72

நல்லவழியிற் சென்று நம்பதவி யெய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே. 73

கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே. 74

வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. 75

அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே. 76






சித்தத்தொடு கிளத்தல்

கண்ணிகள்

அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர
மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை
மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற. 77

அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோமெனத் தும்பீபற. 78

ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற. 79

மூவாசை விட்டோமென்றே தும்பீபற - பர
முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த
செகத்தை யொழித்தோமென்று தும்பீபற. 80

பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோ மென்றேநீ தும்பீபற
வாழ்விட மென்றெய்தோந் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற. 81

எப்பொருளுங் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற. 82

குயிலொடு கிளத்தல்

கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே - கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே.


சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே - நிறை
சந்தோஷ மாகவே கூவுகுயிலே. 83

உலகமோக் காளமாமென் றோதுகுயிலே - எங்கள்
உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே
பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே - எழு
பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே. 84

சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே
மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே - மூல
மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே. 85

எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம்
ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி
நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே. 86

மயிலொடு கிளத்தல்

ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள்
ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங்
குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே. 87

இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி
இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே. 88

கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும்
காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே. 89

அன்னத்தொடு கிளத்தல்

சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே. 90



காற்றின் மரமுறியுங் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடி லஞ்ஞானந் தூரப்போம் மடவனமே. 91

அக்கினியால் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குநல் லறிவாலே பாவம் போம் மடவனமே. 92

குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டிலுருப் படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே. 93

அப்புடனே யுப்புச்சேர்ந் துளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுட னொன்றிநில்லு மடவனமே. 94

காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே. 95



புல்லாங்குழலூதல்

கண்ணிகள்

தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லையென் றூதுகுழல் - கோனே
இல்லையென் றூதுகுழல். 96

இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்
அந்தமா யூதுகுழல் - கோனே
அந்தமா யூதுகுழல். 97

மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே
கானமா யூதுகுழல் - கோனே
கானமா யூதுகுழல். 98

நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
பேயரென் றூதுகுழல் - கோனே
பேயரென் றூதுகுழல். 99

ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
சாடியே யூதுகுழல் - கோனே
சாடியே யூதுகுழல். 100




ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல். 101

மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களை
கட்டிவைத் தூதுகுழல் - கோனே
கட்டிவைத் தூதுகுழல். 102

கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
கிட்டாவென் றூதுகுழல் - கோனே
கிட்டாவென் றூதுகுழல். 103

பெட்டியிற் பாம்பெனப் பேய்மன மடங்க
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல். 104

எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
தனதாக வூதுகுழல் - கோனே
தனதாக வூதுகுழல். 105

அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக்
கற்றதென் றூதுகுழல் - கோனே
கற்றதென் றூதுகுழல். 106

பால்கறத்தல்

சாவா திருந்திடப் பால்கற - சிரம்
தன்னி லிருந்திடும் பால் கற
வேவா திருந்திடப் பால்கற - வெறும்
வெட்ட வெளிக்குள்ளே பால்கற. 107

தோயா திருந்திடும் பால்கற - முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற. 108

நாறா திருந்திடும் பால்கற - நெடு
நாளு மிருந்திடப் பால்கற


மாறா தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற. 109

உலகம் வெறுத்திடும் பால்கற - மிக்க
ஒக்காள மாகிய பால்கற
கலசத் தினுள்விழப் பால்கற - நிறை
கண்டத்தி னுள்விழப் பால்கற. 110

ஏப்பம் விடாமலே பாற்கற - வரும்
ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற - பர
சிவத்துடன் சாரவே பால்கற. 111

அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற - தொல்லை
வேதனை கெடவே பால்கற. 112

கிடை கட்டுதல்

இருவினையான மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை யடக்கிவிடு கோனே. 113

சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமவமாக் கழிப்பவரே சனனமதில் வருவார். 114

அகங்கார மாடுகண்மூன் றகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ யடக்கிவிடு கோனே. 115

ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டுக் கோனே - உடன்,
உறையுமிரு மலந்தனையு மோட்டிக் கட்டுகோனே. 116

மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுகோனே - மிக,
முக்கால நேர்மையெல்லா முன்பறிவாய் கோனே. 117

இந்திரியத் திரயங்களை இறக்கிவிடு கோனே - என்றும்
இல்லையென்றே மரணங்குழு லெடுத்தூது கோனே. 118




உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே - உனக்கு
உள்ளிருக்குங் கள்ளமெல்லாம் ஓடிப்போங் கோனே. 119

முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை முத்தியுண்டாங் கோனே. 120

கன்மபல மாடுகளைக் கடைக்கட்டு கோனே - மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டு கோனே. 121

காரணக்கோ மூன்றனையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
கைவசமாஞ் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே. 122

வேறு

பிரமாந்த ரத்திற் பேரொளி காணெங்கள் கோனே - வாய்
பேசா திருந்து பெருநிட்டை சாரெங்கள் கோனே. 123

சிரமதிற் கமலச் சேவை தெரிந்தெங்கள் கோனே - முத்தி
சித்திக்குந் தந்திரஞ் சித்தத் தறியெங்கள் கோனே. 124

விண்ணாடி வத்துவை மெய்யறிவிற் காணுங் கோனே - என்றும்
மெய்யே மெய்யிற்கொண்டு மெய்யறிவிற் செல்லுங் கோனே. 125

கண்ணாடி யினுள்ளே கண்பார்த் துக்கொள்ளுங் கோனே -
ஞானக்
கண்ணன்றிக்கண்ணாடி காணவொண்ணா தெங்கள் கோனே. 126

சூனியமானதைச் சுட்டுவா எங்குண்டுகோனே - புத்தி
சூக்குமமே யதைச்சுட்டு மென்றெண்ணங் கொள் கோனே. 127

நித்திய மானது நேர்படி லேநிலை கோனே - என்றும்
நிற்குமென் றேகண்டு நிச்சயங் காணெங்கள் கோனே. 128

சத்தியும் பரமுந் தன்னுட் கலந்தே கோனே - நிட்டை
சாதிக்கி லிரண்டுந் தன்னுள்ளே காணலாங் கோனே. 129

மூகைபோலிருந்து மோனத்தைச் சாதியெங்கோனே - பர
மூலநிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே. 130



 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar